சேலம், மார்ச் 6:கோவை-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ் நேற்று 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து மும்பை லோக்மான்ய திலக்கிற்கு தினசரி எக்ஸ்பிரஸ் (11014) இயக்கப்பட்டு வருகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே செல்லும் இந்த ரயில் நேற்று, கோவையில் காலை 8.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2.10 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதாவது முற்பகல் 11 மணிக்கு கோவை-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
இதனால், வழித்தடத்தில் உள்ள ஈரோடு, சேலம் உள்ளிட்ட ஸ்டேஷன்களுக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்துச் சென்றது. இந்த ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர். மறுமார்க்கத்தில் மும்பையில் இருந்து வந்த ரயில், தாமதமாக வந்து சேர்ந்ததால், இங்கிருந்து ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.