சாத்தான்குளம், ஆக. 4: கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை அடுத்த தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் சப்பாணி மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மந்திரமூர்த்தியின் மகன் ஜெபராஜ் (26). இவர் சாத்தான்குளம் அழகம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு இவருக்கும் சாத்தான்குளம் ஆர்.சி. வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னத்துரையின் மகன் பேச்சிமுத்து (47) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பேச்சிமுத்துவை ஜெபராஜ், அரிவாளால் வெட்டியதுடன் சாதி குறித்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துச் ெசன்றாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சாத்தான்குளம் போலீசார், ஜெபராஜ் மீது கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஜெபராஜ் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. டேவிட் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் ஜெபராஜை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஜெபராஜை போலீசார் நேற்று முன்தினம் (2ம் தேதி) கைது செய்தனர்.