சென்னை: கூடுதல் தளர்வுகள் ஊரடங்கு நீடிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததால், தொழிற்பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் செயல்பட தொடங்கியது. மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வந்தனர். பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நேற்று காலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று முதல் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையம், தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையம் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை முதல் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு வந்தனர். அதேபோன்று, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் உடல் வெப்ப சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், மாணவர்களுக்கு புதிய வகுப்புக்கான புத்தங்கள் வழங்கப்பட்டது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நோய் பரவலை கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய்த்தொற்று அறிகுறி ஏற்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். வீதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீறி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது….