ஈரோடு,ஜன.5: ஈரோடு மாவட்டத்தின் 14 வட்டாரங்களில்; உள்ள 225 கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் ’மாஸ் கிளீனிங்’ எனும் ஒட்டு மொத்த தூய்மை பணியை கடந்த 2, 3ம் தேதிகளில் மேற்கொள்ளுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தி இருந்தார். அதன்படி 225 கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் இப்பணிக்கென சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,மாவட்ட திட்ட மேலாண்மை அலகு பணியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,சாலை ஓரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடங்கள் என குப்பைகள் அதிகமாக உள்ள 456 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு,அப்பகுதிகளில் மொத்தம் 10 டன் அளவிலான குப்பைக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்களால் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு,உரம் தயாரிப்புக்கு உரக் குழிகளுக்கும், நுண்ணுயிர் தயாரிப்பு மையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்பட்டு, 1 டன் அளவிலான நெகிழிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் மேலாண்மை அலகுக்கு கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழி பயன்பாடு உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.