சென்னை: தமிழகபதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு பெற்ற சங்கங்கள் உரிய ஆவணங்களை காலக்கெடுவிற்குள் சங்கப்பதிவாளரிடம் கோர்வை செய்ய வேண்டும். ஆனால் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம், 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பினும், பல சங்கங்கள் சட்டபூர்வமாக தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகளை மாவட்டப்பதிவாளரிடம் உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாமல் உள்ளன.தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகள் 1978ன் கீழ் தாமதப் பிழை பொறுத்தம் செய்யப்பட வேண்டிய சங்க கோர்வைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய அபராதத் தொகை வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 மாதங்களுக்குள் கட்ட தவறியவர்களுக்கு ரூ.100 அபராதம், 3 மாதங்களுக்கு மேல் கட்ட தவறியவர்களுக்கு ரூ.200 அபராதம், 5 ஆண்டுக்குள் கட்ட தவறியவர்களுக்கு ரூ. 500 அபராதம், 5 ஆண்டுகளுக்கு மேல் கட்ட தவறியவர்களுக்கு ரூ.1,000 அபராதம், 15 ஆண்டுகளுக்கு மேல் கட்ட தவறியவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. சங்கங்களின் ஆண்டறிக்கைகளுக்குரிய கோர்வை கட்டணம் சங்கத்தின் வரவு செலவு கணக்கின் அடிப்படையில் மட்டும் கணக்கீடு செய்யப்படுகிறது. ஆண்டறிக்கைகளை சங்கத்தினர் உரிய காலத்தில் மாவட்டப்பதிவாளரிடம் கோர்வைக்கு தாக்கல் செய்யாத நிலையில் எவ்வளவு ஆண்டுகள் காலதாமதமாக சங்கத்தினரால் கோர்வைக்கு தாக்கல் செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, காலதாமதத்தின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாடு சங்கப்பதிவு விதிகளின் படி சங்க ஆண்டறிக்கைகளின் தாமத பிழைப் பொறுத்தத்திற்கான அபராதம் கணக்கீடு செய்து, அனைத்து சங்கங்களின் விவரங்களையும் தெரிவிக்க கோரப்படுகிறது….