‘‘சேலத்துல அதிகமாக பேசும் காமெடி சமாச்சாரத்தை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியில சேலத்துக்காரருக்கும், தேனிக்காரருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ள கதை ஊருக்கே தெரிந்த ஒன்றுதான். இதுல சேலத்துக்காரர் கை ஓங்கியிருப்பதும் இலை கட்சியினர் மத்தியில் பேச்சாக இருக்கு. அதிமுக ரெண்டா உடைஞ்சப்போ, மாங்கனி மாநகருல முதலில் தேனிக்காரர் கை தான் ஓங்கியிருந்ததாம். ஆனா, கரன்சி, பதவி செய்த மாயத்தால இப்போ அப்படியே தலைகீழா மாறிப்போச்சாம். எண்ணிக்கைக்கு கூட அவருக்கு ஆதரவாளர்கள் இல்லையாம். இந்நிலையில சேலத்துக்காரருக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்காம். ‘அடப்பாவிகளா ஒற்றை தலைமைங்குற பதவிய அவருக்கிட்ட கொடுத்துப்பாருங்க… அதுக்கு அப்புறம்தான்டா மாங்கனிக்காரரு யாரு… அவருடைய உண்மையான குணம் என்ன என்று தெரிந்து கொள்ளுவாங்க… இப்போது ஆதரவு தெரிவிச்சவங்க பின்னாடி வருத்தப்படுவாங்க…’ என்று விவரம் தெரிந்த கட்சிக்காரர்கள் சிரிக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தெற்கு மாவட்டத்தில் யாருக்கு இறங்குமுகம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் தேனிக்காரருக்கு இறங்கு முகமாகத்தான் இருக்காம். அவர் சார்பாக மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் சுணக்கம், கரன்சியை அள்ளி கொடுப்பதில் தயக்கம் இருக்காம். அதுவே, இப்போது தேனிக்காரருக்கு மைனஸ் ஆக மாறி உள்ளதாம். அவர் தர்மயுத்தம் நடத்திய போது எம்எல்ஏக்களை பாதுகாக்க அனைவரும் சொகுசு பஸ்களில் கூவத்தூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பஸ்சை நடுவழியில் நிறுத்தி இறங்கி வந்து தேனிக்காரரை சந்தித்து நேரடியாக ஆதரவு தெரிவித்தவர் தான் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ‘முகத்தின்’ பெயரை நடுவில் கொண்டவர். தற்போது அவரே கூட்டம் போட்டு தீர்மானம் இயற்றி சேலம்காரருக்கு தான் தனது ஆதரவு என அறிவித்து விட்டார். இதேபோல கடம்பூர்காரரும் எங்கள் ஓட்டு சேலத்துக்கு தான் என்று சொல்லிட்டாராம். ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் செல்வாக்காக இருந்த தேனிக்காரருக்கு இப்போது ஆதரவு மாவட்ட செயலாளர்களே இல்லையாம். இதனால, தேனிக்காரர் செம குழப்பத்தில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சியை கொடுத்து கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள விஐபியை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், கடலோர மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கரன்சி கொடுத்து, ஆதரவுக்கு ஆள் திரட்டும் வேலை நடந்து வருகிறதாம். தூங்கா நகர முன்னாள் மந்திரியான உதயமானவரின் உறவினரே கடலோர மாவட்டத்தின் இலைக்கட்சி மாவட்ட செயலாளராக ஆக இருக்கிறாராம். இவரைப்பிடித்து அவர் மாவட்டத்தின் பொதுக்குழுவினர் அத்தனை பேரையும் வளைத்து, சேலம்காரருக்கு ஆதரவு கோரி, நிதி விநியோகத்தை வேகப்படுத்தி இருக்கிறார்களாம். சேலம்காரரின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் உதயமானவர் சார்ந்த சமூகத்தினர், எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டுவது, சமூக வலைத்தளங்களில் எதிர் கருத்துகள் பதிவிடுவதென இருக்கின்றனர். கட்சித் தலைவி மறைவிற்கு பிறகு கட்சித் தலைமை ஏற்க தோழியை முன்மொழிந்தவர், தேனி மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்க தவிட்டாராம். இதன் மூலம் தன்னை தென்மாவட்டத்தில் சேலம்காரரின் வலது கை நான்தான் என்று முன்னிலைப்படுத்த முயற்சி செய்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிடிஓ அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் இரு துருவங்கள் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.வெயிலூர் மாவட்டத்தில் அணையே இல்லாத கட்டு ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குவதில் கில்லாடியான ‘‘பி’’யானவரும், கருவூலத்தில் பணியாற்றும் தனமானவரும் அதிகாரிகளையே அலற வைக்கிறார்களாம். உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்களில் திட்ட செலவினங்கள், நிர்வாக செலவினங்கள் அனைத்துக்கும் தனியான சாப்ட்வேரும், சம்பளம், பயணப்படி, லோன் உட்பட அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர் வரையிலான அனைவருக்கான நிதிவிடுவிப்பு ஐஎப்எஸ்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் மூலமாகவும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பாஸ்வேர்டை ஒவ்வொரு ஒன்றியத்தில் பணியாற்றும்போதும் தனியாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பில் பாஸ் செய்வதற்கும் பர்சன்டேஜ் நிர்ணயித்து வசூல் செய்து விடுவாராம் ‘‘பி’’யானவர். தான் பணியாற்றும் ஒன்றியத்தில் இருந்து மாறுதலாகி செல்லும்போது யாருக்கும் அந்த பாஸ்வேர்டை தருவதில்லையாம். அதோடு அந்த கணக்குகளை கையாளுவதில் கைதேர்ந்தவர் என்பதால் தன்னை தவிர யாரும் அதை தெரிந்து கொள்ளக்கூடாது, எங்கிருந்தாலும் அதை நாம்தான் செய்ய வேண்டும் என்பதிலும், அதன் மூலம் பர்சன்டேஜ் பார்த்துவிட வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பாராம்.அதேபோல் கருவூலத்தில் உள்ள தனமானவரும், பர்சன்டேஜ் கொடுத்தால்தான் பர்சன்டேஜை மூவ் செய்வாராம். இந்த விஷயத்தில் ரெண்டுபேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு செய்வார்களாம். இதனால் கணியம்பாடி உட்பட பல ஒன்றியங்களை சேர்ந்த பிடிஓக்களும், மேனேஜர்களும் தவியாய் தவிக்கிறார்களாம். இதில் கீழ்நிலையில் பணியாற்றுபவர்கள் மருத்துவ செலவு உட்பட பல்வேறு அவசரங்களுக்கு அட்வான்ஸ் அல்லது கடன் பெற விண்ணப்பித்து சென்றாலும் பர்சன்ட் கமிஷன் கொடுத்தால்தான் செய்வார்களாம் இரண்டு பேரும். அவங்களே கஷ்டத்துலதான் கடனையும், அட்வான்ஸையும் வாங்குகிறார்கள். தற்போது இவரின் மீது லஞ்ச ஒழிப்பு துறையின் பார்வை விழுந்துள்ளதாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா….