ஊட்டி, அக்.11: வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராடிய எம்ஆர்பி செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதைதொடர்ந்து, செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கைது செய்யப்பட்ட எம்ஆர்பி செவிலியர்களை உடனடியாக விடுதலை செய்து, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மதியம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அய்யனார் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தன், செவிலியர் சங்க மாவட்ட தலைவர் பிரவீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.