கூடலூர், அக்.11:நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மருத்துவ பணிகள் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கூடலூரில் நடந்தது. இம்முகாம் கூடலூர் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நாளை (12ம் தேதி) நடைபெறுகிறது.
18 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் இந்த மருத்துவ பரிசோதனை மற்றும் அதன் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுத்தருதல், உதவி உபகரணங்கள் வழங்குதல், உதவித்தொகை மற்றும் பராமரிப்பு தொகை பெற்று தருதல், ஆதார வளமையத்தின் மூலம் முட நீக்கு பயிற்சிகள் அளித்தல், இலவச அறுவை சிகிச்சை வழங்குதல், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல்,
குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வி அளித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஆகியவை வழங்கப்படுகிறது. இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, 2 பாஸ்போர்ட் சைஸ் படங்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரிஜினல் ஆகியவற்றுடன் அழைத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.