பாலக்காடு, அக்.11: பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே நெல்லியாம்பதி சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் போத்துண்டி வனத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்த கூடாது என்றும் தின்பண்டங்களின் கழிவுகளை சாலையோரங்களில் வீசக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவற்றை மீறி சில பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை வழித்தடங்களில் சாப்பிட்டு அவற்றை அங்கேயே விட்டு செல்கின்றனர். இவர்கள் வீசுகின்ற தின்பண்டங்களுடன் பிளாஸ்டிக்கையும் வன விலங்குகள் உண்டு உயிரிழப்பது தொடர்கிறது. இதனை தடுக்க வனத்துறையினர் வனப்பகுதிக்குள் நுழைகின்ற சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளையும் விதித்துள்ளனர்.
இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பாதுகாப்பு அதிகாரிகள் ரகுநாதன், மலம்புழா பிளாக் மேம்பாட்டுக்குழு அதிகாரி கார்த்திகேயன், திட்ட அதிகாரி ஷெரிப், பிரதீப் உள்பட சிறப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்து அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.