அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகே 60 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வரும் ஏழு குடும்பங்கள் அரசு தலையிட்டு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர். அங்குள்ள வடக்கடல் கிராமம் கீழத்தெரு காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜமாணிக்கம். இவருடைய மகன்கள் மற்றும் உறவினர்கள் என 6 பேரும் ராஜமாணிக்கம் வீட்டின் அருகே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜமாணிக்கத்திற்கும் அவருடைய உறவினருமான அண்ணாமலை என்பவரின் மகன்கள் அழகானந்தம், ரங்கராஜுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலரும் போராடியும் எந்த பயனும் கிடைக்காததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு இல்லாததால் குடிநீருக்காக தினம்தோறும் பல கிலோ மீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் கொசுக்கடி மற்றும் பூச்சிகள் கண்டிப்பதாக கூறி மிகுந்த மனவேதனை அடைகின்றனர். எனவே அரசு இப்பிரச்னையில் தலையிட்டு குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.இல்லாத பட்சத்தில் குடும்பத்தோடு அனைவரும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கண்ணீர் மல்க தெரிவித்தது. காண்போரை கண்கலங்க செய்தது.