பெரம்பலூர்,பிப்.6: மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காததை கண்டித்து பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காததை கண்டித்து ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் மாநில அரசு தங்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன்வாடி பணியாளர்கள் 100 பேர் இதில் பங்கேற்றனர்.