உளுந்தூர்பேட்டை, செப். 2: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் வானம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமர்(37) நேற்று முன் தினம் இரவு வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்தவேல் மகன் அஜித்(21), செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாலு மகன் பூமிநாதன் ஆகிய இருவரும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் ராமர் அவர்களிடம் பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்டதையடுத்து பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், திடீரென பெட்ரோல் பங்க் ஊழியர் ராமரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ராமர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ராமர் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிந்து உளுந்தாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த அஜித் கைது செய்யப்பட்டு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பூமிநாதனை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.