அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கிரண், இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பலால் படகை இடித்து தள்ளியபோது இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள பொன்னன்வயல் மயானத்தில் ராஜ்கிரண் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது மனைவி பிருந்தா, மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று மறுபிரேத பரிசோதனைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி மணமேல்குடி தாசில்தார் ராஜா, கோட்டைப்பட்டினம் போலீசார், புதுக்கோட்டை மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னக்குப்பன், ராஜ்கிரண் மனைவி பிருந்தா, இவரது வழக்கறிஞர்கள் முன்னிலையில் ராஜ்கிரண் உடல் நேற்று காலை பொக்லைன் மூலம் தோண்டி எடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் ராஜ்கிரண் உடல், மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கை வரும் 24ம்தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்….
இலங்கை கடற்படை சுட்டதில் இறந்தாரா? புதுகை மீனவர் உடல் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை: ஐகோர்ட் கிளை உத்தரவின்படி நடந்தது
previous post