கோபி,ஏப்.10: ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரின் கருத்தை கண்டித்து வரும் 13ம் தேதி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். கோபியில் நடைபெற்ற பனை நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், கலந்துகொண்டு வாரியத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதைத்தொடர்ந்து அவர் செய்தியர்களிடம் கூறியதாவது:
தமிழக ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறார். சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்தை ஆதரிக்காமல் தொடர்ந்து அதற்கு பல இடையூறு செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு அனுமதி அளிக்காமல், அவரது அலுவலகத்தில் வைத்துக்கொண்டு, நீண்ட நாட்களுக்கு பிறகு அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார். தீர்மானங்களை பெற்றுக்கொண்டு அவர் இழிவாகவும், கேவலமாகவும் தமிழ்நாட்டை மதிக்காத அளவுக்கு இருந்து கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல போராட்டங்களை நடத்தி ஆலையை மூடி, மக்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் குருவிகளை சுடுவதுபோல் 13 பேரை சுட்டுக்கொன்றனர். அதையும் ஆளுநர் இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார். அதை கண்டித்து வருகிற 13ம் தேதி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பனை மரத்தொழிலாளர் நலவாரியத்தில் பத்தாயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது 8 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதுவரை வாரியத்தில் மொத்தம் 18 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு என்றார். நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.