Thursday, May 9, 2024
Home » ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று முதல் கட்ட லட்சார்ச்சனை விழா துவக்கம்: பக்தர்கள் பங்கேற்க நிர்வாகம் அழைப்பு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று முதல் கட்ட லட்சார்ச்சனை விழா துவக்கம்: பக்தர்கள் பங்கேற்க நிர்வாகம் அழைப்பு

by Ranjith

வலங்கைமான், ஏப்.16: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 22ம் தேதி நடைபெறும் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா இன்று துவங்குகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க கோயில் நிர்வாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரதலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு குருபகவான் வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். இதைமுன்னிட்டு, இக்கோயிலில் குரு பெயர்ச்சிக்கு முன் குரு பெயர்ச்சிக்குப் பின் என இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. இந்தாண்டு முதற்கட்ட லட்சார்ச்சனை விழா குரு பெயர்ச்சிக்கு முன் இன்று (16ம் தேதி) துவங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. 22 ம் தேதி குரு பெயர்ச்சிக்கு பின்னதாக 27 ம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை 2வது கட்ட லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. மேஷம்,ரிஷபம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம், கும்பம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் ரூ.400 கட்டணமாக செலுத்தி கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம்.

லட்சார்ச்சனை விழாவில் பங்குபெறும் பக்தர்களுக்கு 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும் முன்னதாக குறிப்பிடப்பட்ட நாட்களில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு ஆறு மணி வரையும் நடைபெறும். தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி ஆகிய முழு விவரங்களுடன் தொகையை மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து கோயில் முகவரிக்கு அனுப்பி குருபெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பிரசாதத்தை அஞ்சல் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

டிமாண்ட் டிராப்ட் எடுப்பவர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது ஆலங்குடி சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து கோயில் முகவரிக்கு அனுப்பலாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் அறநிலைய உதவிஆணையர் மணவழகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi