திருவில்லிபுத்தூர், மே 30: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தேரை அலங்கரிக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரசித்திபெற்ற திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம வருகிற ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் ஜூலை 14ல் நடைபெறுகிறது. இதற்காக தேருக்கு நாள் செய்யும் விழா கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் தேரை அலங்கரிக்கும் பணிகள் துவங்கின.
வழக்கமாக தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடும் அய்யனார் என்பவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அலங்காரப் பணியில் ஈடுபட்டுள்ள அய்யனார் கூறும்போது, தேருக்கு நாள் செய்ததால் தேரை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி நிறைவடைந்த உடன் திரு ஆடிப்பூர கொட்டகையில் பந்தல் உள் அலங்கார பணி மற்றும் கோயில் முகப்பு அலங்கார பணி, 16 சக்கர தேரோட்டம் அலங்கரிக்கும் பணி என ஒவ்வொன்றாக நடைபெற உள்ளது என தெரிவித்தார்.