சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டக்கவுண்டம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர், தனது கழுத்தில் சாரைப்பாம்பை போட்டுக்கொண்டு வந்து அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார். இதுதொடர்பாக வனத்துறை நடத்திய விசாரணையில், சாரைப்பாம்புடன் சுற்றித்திரிந்தது, கருப்பூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அரவிந்த்குமார் (26) எனத்தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அரவிந்த்குமார் தனது வீட்டின் அருகே சாரைப்பாம்பை பிடித்துள்ளார். அந்த பாம்பை வெளியிடத்தில் கொண்டு சென்று விட திட்டமிட்டு சென்றுள்ளார். அப்போது பிரசார கூட்டத்தை பார்த்ததும், அவர்கள் முன் சாகசம் செய்வது போல் பாம்பை கழுத்தில் அணிந்துகொண்டு சுற்றி வந்துள்ளார். பிறகு அந்த பாம்பை முட்புதரில் விட்டுள்ளார் எனத்தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை கழுத்தில் அணிந்து சுற்றித் திரிந்த வாலிபர் கைது
previous post