புதுடெல்லி: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை காலதாமதமாக தாக்கல் செய்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல், அமலாக்கத்துறை மெத்தன போக்கோடு செயல்படுவது மட்டுமில்லாமல், கால தாமதம் செய்து வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்கிறது என்று குற்றச்சாட்டினார். இதையடுத்து, தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் விசாரித்தனர். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘‘சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நீண்ட மாதங்களாக சிறையில் இருப்பதை அடிப்படையாக கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
அதேப்போன்று மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை அமலாக்கத்துறை தரப்பில் விசாரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அமலாக்கத்துறை வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ராம் சங்கர்,‘‘இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நான்கு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று(நேற்று) வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் வேண்டுமென்றே அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மெத்தன போக்கை கடைபிடிப்பது மட்டுமில்லாமல், கால தாமதம் செய்து வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்கிறது என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விவகாரத்தில் கால தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது உண்மை தான்.
அதற்காக நாங்கள் மன்னிப்பையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் முன்னிலையில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே.6ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
* செந்தில் பாலாஜி வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு கடந்த 1ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
* வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தாமதப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை இவ்வாறு செயல்பட்டுள்ளது.
* தாமதமாக பதில் மனுதாக்கல் செய்ததை ஒப்புக் கொண்ட அமலாக்கத்துறை, அதற்காக நீதிமன்றத்தில் நேற்று மன்னிப்பு கேட்டது.