சென்னை: பார்கின்சன் என்பது மூளையின் ஒரு பகுதி மோசமடையும் நிலை. நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி கூடுதலாக புலன்கள், சிந்திக்கும் திறன், மன ஆரோக்கியம் மற்றும் பலவற்றில் பிற விளைவுகளை உண்டுபண்ணலாம். தற்போது இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் காவேரி மருத்துவமனை சார்பில் புதிதாக 360° பார்கின்சன் வெல்னெஸ் என்ற சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. பார்கின்சன்ஸ் நோயுடன் வாழும் நபர்களுக்கு விரிவான, முழுமையான சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குவதற்கென இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரத்யேக கிளினிக்கில் இயன்முறை சிகிச்சை, உணவுமுறை, உளவியல் ஆலோசனை / ஆற்றுப்படுத்தல் சேவை, மருந்துகள் மேலாண்மை உட்பட விரிவான தொகுப்பு வழங்கப்படுகிறது. தொடக்கத்தில், இந்த கிளினிக், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் திறந்திருக்கும்; அப்போது இப்பாதிப்புள்ள நோயாளிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, சிகிச்சைக்கான பரிந்துரை வழங்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை திட்டங்களை உருவாக்குவதற்கு மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களை உள்ளடக்கிய குழு ஒத்துழைப்போடு செயல்படும்.
இது தொடர்பாக காவேரி மருத்துவமனைசெயலாக்க இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், பார்கின்சன்ஸ் நோய் பாதிப்புடன் வாழ்கின்ற நபர்களால் எதிர்கொள்ளப்படும் தனித்துவமான சவால்களை நாங்கள் நன்கு புரிந்திருக்கிறோம். பார்கின்சன் நோயால் ஏற்படும் உடல்சார்ந்த, உணர்வு சார்ந்த, உளவியல் சார்ந்த பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை பராமரிப்பை வழங்குவதே நோக்கம். இதன்மூலம் மனநிறைவளிக்கும் வாழ்க்கையை நோயாளிகள் வாழ்வதை ஏதுவாக்க இந்த 360° பார்கின்சன் வெல்னெஸ் மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.