அகமதாபாத்: குஜராத் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் மீன்பிடி படகில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படகில் இருந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல, இந்திய மீன்பிடி படகு ஒன்றையும் இதே சோதனையில் பிடிபட்டதாக இந்திய கடலோர காவல் படை நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படகில் 173 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.60 கோடி. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்து மகாராஷ்டிராவை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரின் கூட்டாளிகளான மேலும் 3 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் கடல் பகுதியில் அடுத்தடுத்து போதைப்பொருள் கடத்தல் படகை அதிகாரிகள் மடக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயாரிப்பு ஆலையை போலீசார் கண்டறிந்தனர்.
அங்கிருந்து ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 3 மாத கண்காணிப்பைத் தொடர்ந்து, கடந்த 27ம் தேதி ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளை கண்டறிந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படை போலீசார் 300 கிலோ மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்று சிரோகி மாவட்டத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.