பூந்தமல்லி:சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(32). இவரது நண்பர் ஜெயக்குமார். இருவரும் சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகனம் மூலம் குடிநீர் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த கோட்டீஸ்வரி அன்பு என்பவரின் மருமகன் மணிகண்டனுக்கும்(35), வெங்கடேசனுக்கும் தண்ணீர் விற்பனை செய்வதில் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனை வெட்டி விட்டு மணிகண்டன் தரப்பினர் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட மூன்று பேரை பூந்தமல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் மருமகன் மணிகண்டன் அவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த இருவரும் நேற்று பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ன் நீதிபதி ராஜேஷ் ராஜு முன்னிலையில் சரணடைந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.