பெரம்பூர்: வட சென்னை பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தனி கவனம் செலுத்தி கொடுங்கையூர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் வடமாநிலத்தில் இருந்து கொரியர் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்த மற்றும் விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது பிளாக்கில் இயங்கிவரும் தனியார் கொரியர் நிறுவனத்துக்கு பாட்னாவில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் மாதவரம் மில்க் காலனி உள்ள முகவரிக்கு கொண்டு சென்று தர வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் பார்சலில் உள்ள எண்ணில் தொடர்புகொண்டபோது, ‘’பார்சலை வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் நாங்கள் கூறும் இடத்திற்கு கொண்டு வந்து தாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கொரியர் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பார்சலை வேறு இடத்தில் வைத்து கொடுக்கும்போது மறைந்திருந்த போலீசார் சென்று 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மாதவரம் மில்க் காலனி பகுதியை சேர்ந்த பிரவீன் (24), ராஜாராம் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் பாட்னாவில் இருந்து ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிவந்து கொடுங்கையூர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வரவழைத்து அதனை விற்பனை செய்து வந்த முக்கிய நபர் அஜய் எட்வர்ட் (22) என்பவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்படி, தனிப்படையினர் தேடி வந்தனர். கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மேற்பார்வையில், எஸ்ஐ ராஜ்கிரண், காவலர்கள் ரவிச்சந்திரன், ஐயப்பராஜ் ஆகியோர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் உதவியுடன் அஜய் எட்வின் அரியானா மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடந்த 3 தினங்களுக்கு முன் அரியானாவுக்கு சென்று குரு கிராம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அஜய் எட்வர்டை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாவது;சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு படிக்கும் போது ஏற்பட்ட பழக்கத்தினால் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக முதலில் பயன்படுத்த தொடங்கியுள்ளார். பின்னர் அந்த மாத்திரையை மாணவர்கள் பயன்படுத்துவதை அறிந்து அதனை விற்பனை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இ காமர்ஸ் என்ற இணையதளத்தில் சென்று மாத்திரைகளை விற்கும் நிறுவனங்களை அணுகி குறைந்த விலைக்கு குறைவான அளவில் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து வடசென்னையின் பல பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சூளைமேடு காவல் நிலையத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்குவதை அறிந்த வட மாநிலத்தை சேர்ந்த மருந்து கம்பெனிகள் எந்தவித மருத்துவ சீட்டும் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை வழங்கியுள்ளனர். மருத்துவ பிரதிநிதிகளை சந்திக்க சூரத், பாட்னா பகுதிக்கு சென்று சந்தித்து மாத்திரைகளை வாங்குவது பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.