திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுகவோ, காங்கிரசோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சனாதனத்தில் உள்ள பிற்போக்கான விஷயங்களை எதிர்க்கின்றோம். இப்போது சனாதனம் பற்றி தவறான பரப்புதல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி போல் கட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றனர். சனாதனம் என்பது பழமையை அப்படியே பின்பற்றுவது. இந்திய தேசத்தில் சனாதனம் என்பது ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைக்கக் கூடாது; பக்கத்தில் உட்காரக் கூடாது; பெண்கள் வெளி உலகத்திற்கே வரக்கூடாது; கணவன் இறந்துவிட்டால் இளம் பெண்ணாக இருந்தாலும் உடன்கட்டை ஏற வேண்டும், இதுபோன்ற பிற்போக்கான விஷயங்களைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்.
சனாதனத்தின் பிற்போக்கை எதிர்த்த காரணத்தால் அமைச்சர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்துள்ளார்கள். எப்படிப்பட்ட வன்முறையாளர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரே தேர்தல் என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் இந்த நாட்டிற்கு ஒத்துவராத ஒன்றாகும். மோடி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டு அதிபராக வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஒத்துவராத சட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறார். இவ்வாறு கூறினார்.