Tuesday, June 11, 2024
Home » ஏனோ வானிலை மாறுதே?

ஏனோ வானிலை மாறுதே?

by MuthuKumar

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் கடுமையாக அதிகரித்தது. வழக்கத்தை விட 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்தது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 112 டிகிரி, ஈரோடில் 111, வேலூரில் 110, மதுரை, திருச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவானது. வெப்பத்தை தணிப்பதற்காக தர்பூசணி, எலுமிச்சை ஜூஸ், கரும்பு ஜூஸ், கம்பங்கூழ் போன்றவற்றை அருந்தி, மக்கள் வெயிலின் தாக்கத்தை ஓரளவு தணித்து வந்தனர். இருப்பினும், வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல் வெக்கையில் பரிதவித்து வந்தனர்.

பொதுவாக, வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வர். தென்மாவட்ட மக்களின் முதல் சாய்ஸ் கொடைக்கானலாகத்தான் இருக்கும். ஆனால், அங்கேயும் சுமார் ஒரு வாரம் வரை, பல இடங்களில் காட்டுத்தீ பரவியது. வெயிலின் தாக்கத்தால் புற்கள் கருகி பல இடங்களில் காட்டுத்தீ பரவியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல, கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரமும் துவங்கியது. அக்னிக்கு முன்பே வெயில் கொளுத்தி எடுக்கும் சூழலில், மே 4ம் தேதியில் இருந்து வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே வெப்பநிலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை, சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கியது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காட்டுத்தீ பரவிய கொடைக்கானலில் கூட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து மதுரை புறநகர் மற்றும் நகரின் பல இடங்கள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 4, 5 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் மேகமலை உள்ளிட்ட பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18, 19ம் தேதி வரை தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வறண்ட வானிலை மாறி கோடைகாலத்தில் குளுகுளு சீசனை அனுபவிப்பது போல வானிலை மாறிக்கிடக்கிறது. வெப்பமும் சுமார் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. வெப்ப அலையின் தாக்கமும் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வழக்கமாக, ஜூன் மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். தற்போது முன்கூட்டியே துவங்குவதற்கான சூழல் நிலவி வருகிறது. அங்கு இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. இன்னும் 3 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மழை தீவிரமடையும்பட்சத்தில் தமிழகத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப அலையில் இருந்து மீண்டு, பல மாவட்டங்களில் குளிர்ச்சியான சீசன் நிலவினாலும், பொதுமக்கள் உடல்நலனில் போதிய அக்கறை காட்ட வேண்டும். திடீர் வானிலை மாற்றம் உடல்ரீதியாக சில உபாதைகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை. நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் எச்சரிக்கை உணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டுமென மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல இடங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

12 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi