மும்பை : 2023 ஒருநாள் உலக கோப்பையை வெல்ல, தொடரில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தவற விட்டுவிடாதீர்கள் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை கூறி உள்ளார். இந்திய அணி தன் முதல் ஒருநாள் உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது. அதன் பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியா தற்போது 2023ல் உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக கருதப்படுகிறது.
தற்போது இந்திய அணி வலுவாகவும், சமநிலை கொண்ட அணியாகவும் உள்ளது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், “ஒரு அணி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு கொண்ட அணியாக மாற சில காலம் எடுத்துக் கொள்ளும். அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் கலந்த சரி சமமான அணி அமைய வேண்டும். அது 2011இல் அமைந்தது. அதன்பின் இப்போது அமைந்துள்ளது. இந்திய அணி ஆடுவதை வைத்துப் பார்க்கும் போது இதுதான் அவர்களின் சிறந்த வாய்ப்பு என தோன்றுகிறது.
மேலும், இந்த முறை அவர்கள் தவறவிட்டால், அடுத்த மூன்று உலகக்கோப்பை தொடர்களை வெல்வது பற்றி அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த அணியின் 7 – 8 வீரர்கள் தங்கள் உச்சக்கட்ட ஆட்டத்தை ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கக் கூடும். இந்திய அணி ஆடுவதை வைத்தும், சூழ்நிலைகளை வைத்தும் பார்த்தால், இந்தியாவிடம் வெற்றி பெறுவதற்கு தேவையான அணி இருக்கிறது” என்றார்.