சென்னை: கலைஞர் நூற்றாண்டையொட்டி பன்னாட்டு தமிழ் மொழி ஆராய்ச்சிக் கழகம், சென்னை வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழியல் மற்றும் பண்பாட்டு புலம் ஆகியவை இணைந்து முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டை திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடத்தியது. இந்த மாநாட்டை உயர்கல்வித் துறை அமைச்சர் .பொன்முடி தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், வெளிநாட்டுத் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலாநிதி வீராசாமி எம்.பி., மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத், திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் கலைஞர் ஆற்றிய பணிகளை நாம் என்றும் நினைவு கூற வேண்டும்’ என்றார். இதில் அமைச்சர் சாமிநாதன், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் ஆகியோர் பங்கேற்றனர்.