ஆக்லாந்து: ஆஸ்திரலேியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் 9வது பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நடத்தும் ஆண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு சமமான வரவேற்பு மகளிர் உலக கோப்பை போட்டிக்கும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த முறை 9வது மகளிர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் போட்டியை நடத்தும் நாடுகள் உட்பட நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் நார்வே, ஜெர்மனி, ஜப்பான், ஆசிய கண்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், தென் கொரியா உட்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன.
தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகளில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் ஆக.3 வரை நடைபெறும். மொத்தம் 48 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. காலிறுதி ஆட்டங்கள் ஆக. 11, 12 தேதிகளிலும், அரையிறுதி 15, 16 தேதிகளிலும் நடத்தப்படும். தொடர்ந்து ஆக.19ல் 3வது இடத்துக்கான ஆட்டமும், ஆக.20ல் பைனலும் நடைபெற உள்ளன. இதுவரை நடந்த 8 உலக கோப்பை தொடர்களில் அமெரிக்கா 4 முறை சாம்பியனாகி அசத்தியுள்ளது. அதிலும் 2015, 2019 என தொடர்ந்து 2 முறை கோப்பையை வென்றுள்ள நடப்பு சாம்பியன் இம்முறை ஹாட்ரிக் சாதனை முனைப்புடன் களமிறங்குகிறது.