சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டு நெறிமுறைகள்:
* களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
* நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் மற்றும் பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
* சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய மற்றும் நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* சிலைகளை அழகுபடுத்த இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் பயன்படுத்த வேண்டும்.
* விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கலெக்டர், எஸ்பி, மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.