வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, பிளவக்கல் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 8531.17 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 47.56 அடி உயர பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் 42.64 அடி உயர கோவிலாறு அணை உள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 44.33 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 29.59 கன அடியாகவும், கோவிலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும், நீர்வரத்து 40.59 கனஅடியாகவும் உள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல் போக பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்பேரில், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு தண்ணீரை திறந்துவிட்டார்.
பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதமும், பெரியாறநேரடி கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கனஅடி வீதம் 2024 பிப்.29ம் தேதி வரையும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 8531.17 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் திருவில்லிபுத்தூர் மான்ராஜ், சிவகாசி அசோகன், வத்திராயிருப்பு ஒன்றிய சேர்மன் சிந்து முருகன், எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கருப்பசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.