Saturday, July 12, 2025
Home செய்திகள் அரசு பள்ளியில் புகுந்து சமைத்து சாப்பிட்டு பொருட்கள் திருட்டு: மரக்காணம் அருகே நள்ளிரவில் துணிகரம்

அரசு பள்ளியில் புகுந்து சமைத்து சாப்பிட்டு பொருட்கள் திருட்டு: மரக்காணம் அருகே நள்ளிரவில் துணிகரம்

by Mahaprabhu

மரக்காணம்: மரக்காணம் அருகே அரசு பள்ளியில் புகுந்த மர்மநபர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு, அங்கிருந்த பாத்திரங்கள், மளிகை பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்குட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு காலை உணவு சமைக்கும் இடம் பள்ளி வளாகத்தில் தனியாக உள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு சமையல் செய்துவிட்டு சமையல் கூடத்தை மூடிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர்.

இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து வழக்கம் போல் இன்று காலையில் உணவு செய்யும் சமையலர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளனர். அப்போது மாணவர்களுக்கு காலை உணவு சமைக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியான சமையலர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் இரவில் உணவு சமைக்கும் கூடத்தில் புகுந்து மாணவர்களுக்கு உணவு தயாரிக்க வைத்திருந்த சமையல் பொருட்களை பயன்படுத்தி அவர்களே பொங்கல் செய்து, அதே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், சாப்பிட்ட மீதி உணவையும் ஒரு தட்டில் வைத்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் மாணவர்கள் உணவு சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து சமைத்து சாப்பிட்டு விட்டு, பாத்திரங்கள், மளிகை பொருட்களையும் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi