சென்னை: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று மாலை மண்ணடி தம்பு செட்டி தெருவில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இனி தங்கத்தை வாங்க முடியாது, பார்க்கதான் முடியும்.
இதற்கும் காரணம் பாஜ அரசுதான். எல்லா அரசு துறைகளையும் அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பிஎஸ்என்எல் இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போய்விடும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க பார்க்கிறார்கள். பெல் நிறுவனம், எல்ஐசி, விமான நிலையம் இப்படி அனைத்தையும் அம்பானி, அதானிக்கு விற்க துடிக்கிறார்கள்.
வந்தே பாரத் ரயிலை கூட அம்பானி பாரத், அதானி பாரத் என்று மாற்றுவார்கள். எதிர்க்கும் தலைவர்களை அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைக்கிறார்கள். இது நாளை அவர்களுக்கு எதிராக திரும்பும் என்றார்.