சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சு.துரைசாமி எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 1993ம் ஆண்டு மதிமுக துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கழகத்தின் நிர்வாகிகளாக பொறுப்பு வகித்த பலர், தாங்கள் அரசியலுக்கு நுழைவதற்கு முன்பே திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, திமுகவை வளர்த்தவர்கள் என்பதும், உங்களை திமுகவை விட்டு வெளியேற்றியபோது, அதுவரை பாடுபட்டு வளர்த்த திமுகவை விட்டு விலகி, உங்களுக்காக நியாயம் கேட்டு உங்களை முன்னிலைப்படுத்தி மதிமுக உருவானபோது தங்களோடு இணைந்து பாடுபட்டவர்கள்.
மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும் உண்மையிருக்கும் என்று நம்பி உங்களை ஆதரித்தனர். ஆனால், உங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணி தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவுக்கு சென்று விட்டனர்.
தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் மதிமுகவுக்கும் தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும். சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு நீங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கழக தோழர்கள், தமிழகம் முழுவதும் பழைய கழக உறுப்பினர்களே தங்களை புதுப்பித்து கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதில் கழக தோழர்களிடம் தொய்வும் ஆர்வமும் குறைந்துள்ளதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பட்ட சிரமங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
உங்களிடம் நேர்மையும், உண்மையும் இருக்குமானால், ஒவ்வொரு வார்டுகளிலும் உறுப்பினர்களாக புதுப்பித்து கொண்டவர்களையும் புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் பெயரையும் ஆதார் எண்ணையும் இணைத்து சங்கொலியில் வெளியிட கேட்டு கொள்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க்கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சு.துரைசாமி, தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.