அட்லாண்டா: அமெரிக்காவிற்கு படிக்க சென்ற 21 மாணவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அட்லாண்டா, சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்த விசா ஆவணங்களில் குறைபாடுகள் இருந்ததால், அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அமெரிக்காவில் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து வரும் மாணவர்களில் சரியான ஆவணங்களை கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அமெரிக்க கல்லூரியில் முறையான அனுமதி பெற்று அதன்பின்னரே அமெரிக்கா வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்த விசா ஆவணங்களை பரிசோதனை செய்ததில் 21 ேபரின் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தன. அதனால் அவர்கள் தங்களது தாய்நாட்டிற்கு திருப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த மாணவர்களில் சிலர் மிசோரி மற்றும் டகோடாஸ் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட மாணவர்கள், குறிப்பிட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியாது’ என்று குறிப்பிட்டனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவோ, இந்திய அரசோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.