வாஷிங்டன்: அமெரிக்க உளவு விமானம் கடலில் மூழ்கிய நிலையில், அதிலிருந்த 9 வீரர்கள் உயிர்தப்பினர். அமெரிக்க ராணுவத்தின் கடற்படை கண்காணிப்பு உளவு விமானமான போயிங் பி8 போஸிடான் என்ற விமானம், கடற்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்கவும், தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர உளவுத்துறை தகவல்களை சேகரிக்கும்.
இந்நிலையில் இந்த கடற்படை விமானம், ஹவாய் மரைன் கார்ப்ஸ் பேஸ்ஸின் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு சென்ற போது கனோஹே விரிகுடாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஒன்பது வீரர்கள் இருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் பத்திரமாக கரையை அடைந்ததாகவும், அந்த விமானம் கடலில் மூழ்கியதாகவும் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் செய்தித் தொடர்பாளர் கன்னெரி சார்ஜென்ட் ஆர்லாண்டோ பெரெஸ் தெரிவித்துள்ளார்.