புதுடெல்லி: பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பள்ளி,கல்லுாரி சேர்க்கை முதல் பணி நியமனம் வரை பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்துவற்கான மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்தார்.இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் பதிவாளர் ஜெனரலான மிருத்யுஞ்செய் நாராயண் வெளியிட்ட அறிக்கையில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் 2023 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த சட்டம் வழிவகை செய்கிறது. கல்வி நிலையங்களில் சேர்வதற்கும், ஓட்டுனர் உரிமம் பெறுதல்,வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பது, திருமண பதிவுகள், மாநில, ஒன்றிய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக பிறப்பு சான்றிதழை ஒரே ஆவணமாக பயன்படுத்தலாம். இந்த சான்றிதழை பயன்படுத்தி பாஸ்போர்ட், ஆதார் போன்ற ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் எந்த ஒரு புதிய திட்டங்களுக்கும் இந்த ஆவணத்தை பயன்படுத்தலாம்.பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய மற்றும் மாநில அளவிலான தரவுத்தளத்தை உருவாக்க இது உதவும். மேலும், பொது சேவைகள் , சமூக திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளின் வெளிப்படையான வினியோகத்தை உறுதி செய்யும் என கூறியுள்ளார்.