Thursday, May 16, 2024
Home » 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் : ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் : ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

by Porselvi

டெல்லி : 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூலை மாத அரசு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில்,

“2014-ம் ஆண்டுக்கு முன் நாடு பல்வேறு சவால்களை சந்தித்தது. நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2014-ல் பொறுப்பேற்றது.

*கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர்.

*மக்கள் மீண்டும் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம். ரேஷனில் இலவச உணவுப்பொருள் கொடுத்ததன் மூலம் உணவுக்கான கவலையை போக்கிவிட்டோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்துகிறோம்.

*2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா உருவாகும். பா.ஜ.க. அரசின் இலக்காக சமூகநீதி உள்ளது. 4 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதே அரசின் நோக்கம். வறுமை ஒழிப்பு, மகளிருக்கு அதிகாரம், இளைஞர்களுக்கு வாய்ப்பு, அனைவருக்கும் உணவு வழங்குவதே நோக்கம்.

*25 கோடி மக்களை வறுமையில் இருந்து பாஜக அரசு மீட்டுள்ளது. நேரடியாக வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்கியதால் அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி மிச்சம் ஏற்பட்டுள்ளது.

*11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

*முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி முறை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்முனைவாராகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 28% உயர்ந்துள்ளது.

*திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

*விளையாட்டுத்துறையில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. 80 கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உள்ளனர். 2010-ல் 20-ஆக இருந்த கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

*நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உலகம் முழுவதும் பணவீக்கம், வட்டிவிகிதம் அதிகமாக உள்ளது.
தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள சோதனையான சூழல் உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவியபோதும் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாண்டு கடந்து வந்தது.

*இந்தியாவில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளுக்கு வானமே எல்லை.கொரோனா பரவலுக்கு பின் உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோதும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

*சிறு, நடுத்தர குறுந்தொழில்கள் வளர்ச்சி அடைந்து உலக அளவில் போட்டியிடும் வகையில் மேம்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*நாட்டில் விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் முத்தலாக் தடைச்சட்டங்களால் மகளிர் பயனடைந்துள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளது.

*கல்வித்துறையில் சீர்திருத்தங்களை புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் செயல்படுத்தி வருகிறோம்.
10 ஆண்டுகளில் 7 ஐஐடி.கள், 15 எய்ம்ஸ், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

*மாநிலங்களுடன் ஆலோசித்து அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

*ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

*அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

*நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்.ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

*மகப்பேறு திட்டங்கள், குழந்தை நலத் திட்டங்கள் ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்து செயல்படுத்தப்படும். தடுப்பூசி போடும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படும்.

*விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.

*அறுவடைக்கு பின் விளைபொருட்களை பாதுகாக்க, மதிப்புக்கூட்டு பொருட்களை உருவாக்க சந்தைப்படுத்த திட்டம் வகுக்கப்படும்

*நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.

*பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

*9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்.

*9 கோடி பெண்களை உறுப்பினராக கொண்டுள்ள 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் கிராமங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

fifteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi