திருவண்ணாமலை: ஒன்றிய அரசின் திடீர் ஏற்றுமதி தடையால் அரிசி விலை வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உற்பத்தியாகும் அரிசி ரகங்கள் நாள்தோறும் டன் கணக்கில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
ஆனால் விளைச்சல் குறைவு, விலை ஏற்றம் உள்ளிட்ட காரணிகளால் ஒன்றிய அரசு விதித்த திடீர் ஏற்றுமதி தடையால் அரிசி தேக்கமடைந்து இருப்பதாக ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மின் கட்டணத்தில் மானியம், ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்கினால் அரிசி விலை சீரடைந்து தாங்கள் மட்டுமின்றி மக்களும் பயன்பெறுவார்கள் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 20% அரிசியில் ஆரணி மட்டும் 5% பங்களிப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. ஏற்றுமதி தடையால் தாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.