குஹாகர்: மக்களவை தேர்தல் குறித்த பாஜவின் வியூகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிவ சேனா(யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள குஹாகர் பகுதியில் நடந்த பேரணியில் சிவசேனா(யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வாகும். பாஜவின் வியூகத்தை புரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதற்கு விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அரசிலமைப்பை மாற்றும் திட்டத்தின் போது அதனை எதிர்க்கும் குரல்களை அவர்கள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தில் சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது பல முக்கியமான மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. தற்போதைய பாஜ முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எல்வே அத்வானியின் காலத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது”என்றார்.