நாசிக்: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் சந்த்வாத்தில் இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நடந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் (எஸ்பி) சரத்பவார் மற்றும் சிவ சேனா (யூபிடி) எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘நீங்கள் அனைவரும் வாக்களித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்தால் இந்தியா கூட்டணி ஆட்சியானது விவசாயிகளின் குரலாக இருக்கும். அவர்களது நலன்களை பாதுகாப்பதற்காக பணியாற்றும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
பயிர் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்படும், ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுப்பதில் பயிர்களின் விலையை பாதுகாப்பதற்கும் மற்றும் விவசாயத்தை ஜிஎஸ்டியில் இருந்து விலக்கி ஒரே வரியில் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.