Saturday, July 27, 2024
Home » சொட்டுநீர்ப் பாசனத்தில் உளுந்து சாகுபடி!

சொட்டுநீர்ப் பாசனத்தில் உளுந்து சாகுபடி!

by Porselvi

தற்போது நடைபெறும் சித்திரைப் பட்டம் கோடை உளுந்து சாகுபடி செய்திட உகந்த பருவமாக இருக்கிறது. மிகக்குறைவான வயதுடைய பயறுவகைப் பயிரான உளுந்து 70-75 நாட்களில் பலன் தரக்கூடியது. உளுந்து சாகுபடிக்கு தேவையான நீரின் அளவும் மிகக் குறைவு, அதாவது 350 மி.மீ போதுமானது. நுண்ணீர்ப் பாசன முறையில் சொட்டுநீர் அமைத்து நீர் சிக்கனத்தை கடைபிடித்து குறைவான நீரில் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்து உற்பத்தியினை அதிகரிக்கலாம்.உளுந்து வறட்சியைத் தாங்கி வளரும் ஒரு மானாவாரி பயிராக இருந்தாலும் நீர்ப் பாய்ச்சுதல் அவசியம். தற்போதைய சூழ்நிலையில் பாசன நீர் பற்றாக்குறையை சமாளிக்க சிக்கன நீர்ப் பாசன முறையைக் கையாள்வது மிகவும் அவசியம். சொட்டு நீர்ப் பாசனம் போன்ற அதி நவீன நீர்ப்பாசன முறைகள் பயிருக்கு தேவையான அளவு நீரை ஒரே சீராக அளிப்பதோடு மட்டுமின்றி, தேவையான நேரங்களில் அளிக்கவும் உதவுகின்றன. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் பயிரிடுவதால் நீர் சேமிக்கப்படுவதுடன் அதிக விளைச்சலையும் பெறலாம். குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் நீர்ப்பாசனம் செய்வதால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். எப்போதும் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுகிறது. வேலையாட்களின் எண்ணிக்கை குறைவாகவே தேவைப்படும். மேடு பள்ளமான நிலங்களிலும் அதிகப்படியான மற்றும் சீரான விளைச்சலைப் பெற முடியும்.

பராமரிப்பு முறைகள்

நீரில் கரையக்கூடிய உரங்கள் மற்றும் திரவ வடிவில் உள்ள உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை அமில சிகிச்சை செய்ய வேண்டும். தினமும் மணல் வடிகட்டி, சல்லடை வடிகட்டியையும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை பக்கவாட்டுக் குழாய்கள் மற்றும் துணை பிரதான குழாய்கள் மற்றும் நீர் அடைப்பான்களை சுத்தம் செய்ய வேண்டும்.

ரகம்

சுமார் 70-75 நாட்கள் வயதுடைய உளுந்து ரகங்களான வம்பன் 8 மற்றும் வம்பன் 11 ஆகிய ரகங்களைத் தேர்வு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு புழுதி கிடைக்கும் வரை உழ வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் அமைத்தல்

நிலமட்ட சொட்டுநீர்ப் பாசன முறை அமைக்க வேண்டும். சொட்டுநீர்க் குழாய்களை நிலத்தின் மேற்பரப்பில் 2 அடி இடைவெளியில் பரப்ப வேண்டும்.

விதைப்பு

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். ஆனால் சொட்டுநீர்ப் பாசன முறையில் பாத்திகள் மற்றும் நீர் பாய்ச்சுவதற்குத் தேவையான வாய்க்கால்கள் அமைக்கப்பெறாத காரணத்தினால், ஏக்கருக்கு 9 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் எடுத்து விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைநேர்த்தி செய்ய வேண்டும். (பூஞ்சாணக் கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவெளி வேண்டும்). பூஞ்சாண விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து 240 கிராம் ரைசோபியம் மற்றும் 240 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து அதனுடன் விதையினை கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு விதைத்த மூன்றாம் நாள் பெண்டிமெத்தலின் களைக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 1 லிட்டர் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்த பின் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த 12-18 நாட்களில் அகன்ற இலைக் களைகளை கட்டுப்படுத்த இமாஸ்திபயர் மருந்தை ஏக்கருக்கு 250 மி.லி என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பின்னர் விதைத்த 20-25 நாளில் ஒரு கைக்களையும் எடுத்தல் அவசியம்.

உர நிர்வாகம்

பரிந்துரைக்கப்பட்ட உரங்களை விதைப்பதற்கு முன்பு அடியுரமாக வயலில் இட வேண்டும். விதைக்கும் முன் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர் பாஸ்பேட்), 10 கிலோ சாம்பல் சத்து (17 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ்) மற்றும் 10 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை ஒரே சீராக அடி உரமாக இட வேண்டும். மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக இடுவதனால் கந்தகச்சத்து தனியாக இட வேண்டிய அவசியமில்லை. ஆனால் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி) உரம் இடும் பொழுது பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை ஜிப்ஸம் (45 கிலோ) உரம் மூலம் அளிக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

உளுந்துப் பயிருக்கு 350 மி.மீ நீர் தேவைப்படுகிறது. விதைப்பு, பூப்பு, காய் பிடிக்கும் பருவங்களில் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவத்தில் அதிக நீர் தேவைப்படும். விதைகள் விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் மற்றும் மூன்றாம் நாளிலும் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் காலநிலைக்கேற்ப 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

இலைவழி உரம்

பயிரின் 50 சதவிகித பூப்பு பருவத்தில் அதாவது 35-வது நாள் 2 சதம் டி.ஏ.பி கரைசல் இலைவழி உரமாக மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு செடிகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். பின்னர் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாட்கள் கழித்து அதாவது 45-வது நாள் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இதனால் காய்ப் பிடிப்பு அதிகம் காணப்படும். இந்த 2 சதம் டி.ஏ.பி கரைசல் தயாரிப்பதற்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி தேவை. இதனை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை சேகரித்து தெளிக்க வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது) மருந்தை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இதன்மூலம் செடிகள் வறட்சியைத் தாங்கி அதிக அளவில் காய்த்து 20-25 சதவிகிதம் வரையில் கூடுதல் விளைச்சலைக் கொடுக்கும்.

பயிர் பாதுகாப்பு

சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 25-30 வது நாள் டைமீதோயேட் 250 மி.லி / ஏக்கர் என்ற அளவிலும், காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த 40வது நாள் நவலுரோன் 150 மி.லி / ஏக்கர் என்ற அளவிலும், 45-50 வது நாள் குளோர்பைரிபாஸ் 25 மி.லி / ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். வம்பன் 8 ரகம் மஞ்சள் தேமல் நோய், நுனிக் கருகல் மற்றும் சாம்பல் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதால் நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.

அறுவடை

வம்பன் 8 மற்றும் வம்பன் 11 ஆகிய ரகங்கள் ஒருமித்த முதிர்ச்சியுறும் தன்மை உடையதால் ஒரே சமயத்தில் அறுவடை செய்யலாம். காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளை அறுவடை செய்து வெயிலில் காயவைத்து மணிகள் பிரித்தெடுக்கப்பட வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் உளுந்து சாகுபடி செய்வதால் ஒரு செடியில் 60-80 காய்களும், ஒரு காயில் சராசரியாக 5-7 விதைகளும் கிடைக்கும். ஏக்கருக்கு 700 கிலோ என்ற அளவில் மகசூல் தரவல்லது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீரை திறம்பட பயன்படுத்தி உயர் விளைச்சலையும் அதிக நீர் பயன்பாட்டுத் திறனையும் பெற்று கூடுதல் வருமானமும், லாபமும் பெறலாம்.
– முனைவர் ப. இராமகிருஷ்ணன்,
பயிர் இனப்பெருக்கம் மற்றும்
மரபியல் வல்லுநர்,
தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம்,
வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 63804 88348

 

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi