உடுமலை: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் விருந்தினராக உடுமலை கல்லூரி மாணவி பங்கேற்றார். திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி 2ம் ஆண்டு மாணவி உமா நந்தினி. இவர் தேவாரப் பண்ணிசை பாடிய ஆறு ஓதுவார்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆணையின்படி புதிய நாடாளுமன்ற விழாவில் விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கொரோனா காலத்தில் 665 நாட்களாக 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி நிறைவு செய்து திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ், திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா பாடல்களையும் யூடியூப் வலை தளத்தில் பாடியும் வருகிறார். இந்திய சாதனைப் புத்தகம் ‘‘இளம் வயதில் அதிகமான ஆன்மீகப் பாடல்களைப் பாடியவர்’’ என்று இவரது சாதனையைப் பதிவு செய்தது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கலை இளமணி விருது பெற்றவர்.