Tuesday, May 7, 2024
Home » வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என குற்றச்சாட்டு; போனில் பேசியதை டேப் செய்யும் அதிபுத்திசாலி முன்பே கூறாதது ஏன்?.. அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ சரமாரி கேள்வி

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என குற்றச்சாட்டு; போனில் பேசியதை டேப் செய்யும் அதிபுத்திசாலி முன்பே கூறாதது ஏன்?.. அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ சரமாரி கேள்வி

by Neethimaan

மதுரை: வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக கூறும் அதிபுத்திசாலி ஐபிஎஸ் அண்ணாமலை, இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முன்பே கூறாதது ஏன் என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? அல்லது என்ன சொல்வது எனத்தெரியவில்லை.

மதுரையில்தான் இப்படி என நினைத்தால் எல்லா மாவட்டங்களிலும் அப்படித்தான் உள்ளது. ஒவ்வொரு அரசியல் இயக்கங்களும் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். அப்போது பூத் சிலிப்பை அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம், கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும், அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்த அண்ணாமலை, தற்போது பேசுகிறார்.

ஏன் முன்பே பேசவில்லை? குறிப்பாக பாஜ வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை. தேர்தலில் தனக்கு சரியான வாக்குப்பதிவு இல்லை. தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார்.இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்க வேண்டும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜ வாக்காளர்கள் விட்டுப் போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?. ஆனால் தற்போது கேரளாவுக்கும், கர்நாடகத்திற்கும் அண்ணாமலை போகிறார்.

‘ராகுலா இருந்தாலும் மோடியா இருந்தாலும்வரவேற்போம்’
செல்லூர் ராஜூ கூறுகையில், ‘தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி. மோடியா இருந்தாலும் சரி. ஆனால் தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல. எம்.ஆர்.ராதா கூறுவது போல தமிழகத்தில் எல்லோரையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. போதைப்பொருள் விவகாரங்களில் வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமின்றி இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.

You may also like

Leave a Comment

11 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi