புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் மாதம் 600 ஊழியர்களை நியமித்து வருவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேம்ப்வெல் வில்சன் தெரிவித்தார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்தாண்டு ஜனவரியில் டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகு, அந்நிறுவனத்தை சீர் தூக்கும் வகையில் 470 புதிய விமானங்கள் கொள்முதல், சர்வதேச சேவைகளை விரிவுபடுத்துதல் உள்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான கேம்ப்வெல் வில்சன், “ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 50 விமானிகள், 550 ஊழியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். புதிதாக 6 ஏ-350 விமானங்கள் விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமான ஊழியர்களை பொருத்தவரை விமானிகளை விட 10 மடங்கு அதிகளவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். வரும் காலங்களில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொருத்து விமானிகள், ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.