உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கள்ளசந்தையில் மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே கள்ள சந்தையில், அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது, புதரில் அரசு மதுபானங்களை மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு செய்துகொண்டிருந்த வாலிபரை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம், நடத்திய விசாரணையில், வேடபாளையம் கிராமத்தை சேர்ந்த கோபி (45). இவர், அரசு மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு கள்ளசந்தையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட கோபி மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், உத்திரமேரூரை சேர்ந்த தங்கமாரி. இவர், அரசு மதுபாட்டில்களை வாங்கி, அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததால், தங்கமாரியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.