Monday, May 20, 2024
Home » திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வழிபாடுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வழிபாடுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

by Suresh

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக இணையதளம் (யூடியூப்) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க சிவன் கோயிலாகும். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் இத்திருக்கோயிலை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். குறிப்பாக, பவுர்ணமி போன்ற விழா காலங்களில் பக்தர்கள் வருகை லட்சக்கணக்காக அதிகரிக்கிறது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாத பக்தர்களின் வசதிக்காக, உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை நேரடியாக கண்டு தரிசிக்கும் வாய்ப்பை இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அண்ணாமலையார் கோயிலில் நடை திறப்பு முதல், நடை அடைக்கும் நேரம் வரை உற்சவமூர்த்திக்கு நடைபெறும் அனைத்து வழிபாடுகளையும், பூஜைகளையும், அலங்காரத்தையும் நேரடியாக இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனல் வழியாக ஒளிபரப்பப்படுகிறது.

இதற்காக உற்சவ மூர்த்தி சன்னதி எதிரில் அதிநவீன காமிரா பொருத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில், முழுமையான வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே, அண்ணாமலையார் கோயில் உற்சவ மூர்த்தி வழிபாடுகளை நேரில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://youtube.com/@arunchaleswarar templelivestrea எனும் இணைய முகவரி வழியாக காணலாம்.

மேலும், தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘திருக்கோயில்’ எனும் செல்போன் செயலியை பயன்படுத்தியும் நேரடி ஒளிபரப்பை காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. உற்சவ மூர்த்தி வழிபாடு நேரடி ஒளிபரப்புக்கு பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து, திருக்கோயில் விழாக்கள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளையும் அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

eleven − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi