ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் பென்னலூர்பேட்டை அடுத்த வெலமகண்டிகை கிராமத்தில் 15 ம் நூற்றாண்டில் வியாசர் மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வீரஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. அனுமன் ஜெயந்தி 48ம் ஆண்டு நவராத்திரி ஆராதனை பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் காலையில் கலச ஸ்தாபனம், தவஜ ஹோமம் மற்றும் தினமும் காலையில் பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதையொட்டி தினமும் மாலையில் வெலம கண்டிகை, ராமலிங்காபுரம், ராமநாதபுரம், பெரிஞ்சேரி, ராமகுப்பம், மைலாப்பூர், புதுச்சேரி, அனுமந்தாபுரம், போந்தவாக்கம் ஆகிய கிராமங்ளை சேர்ந்த பக்தர்களின் பஜனை நிகழ்சியும் அரி கதா காலேட்சேபமும் நடைபெற்றது.
7வது நாளான இன்று காப்பு கட்டி, மஞ்சள் ஆடை அணிந்த 210 பக்தர்கள் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு உற்சவரான ஆஞ்சநேயரை டிராக்டரில் ஊர்வலமாக வந்து தீ மிதிக்கும் இடத்தில் நின்றது. இதன் பின்னால் ஊர்வலமாக வந்த பக்தர்கள் அக்னி குண்டத்தை 3 முறை வலம் தீ மிதித்தனர். இதன்பின்னர் உற்சவரான ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.