திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விஐபி தரிசனத்திற்காக திருமலையில் உள்ள செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேற்று காரில் வந்த ஒருவர் தான் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் எனக்கூறி கொண்டு அடையாள அட்டை காண்பித்து விஐபி தரிசன டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தார்.
அவரது செயலில் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விஜிலென்ஸ் விசாரணையில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. அவரது பெயர் விஜயவாடாவை சேர்ந்த நரசிம்மராவ் என்பதும், ஏற்கனவே குண்டூர், விஜயவாடாவில் இதேபோன்று பல இடங்களில் உயர் அதிகாரி எனக்கூறி ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்தது.
தற்போது இணைச்செயலாளர் எனக்கூறி போலி அடையாள அட்டை, லெட்டர் பேட் தயாரித்து மோசடி செய்ததால் திருமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.