ஸ்ரீநகர்,ஏப்.12: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நேற்று நடந்த என்கவுன்டரில் ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டு கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பிரெஸிபோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் சுட்டதில் ஒரு தீவிரவாதி பலியானான். அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பலவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.