Saturday, April 27, 2024
Home » வரப்பில் டிம்பர் மரங்கள்… வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்.! வளம் தரும் விவசாயம்: அசத்தும் காஞ்சிபுரம் விவசாயி

வரப்பில் டிம்பர் மரங்கள்… வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்.! வளம் தரும் விவசாயம்: அசத்தும் காஞ்சிபுரம் விவசாயி

by Mahaprabhu

காஞ்சிபுரம்: உற்பத்தி, உற்பத்திக்கு ஏற்ற விலை ஆகிய இரண்டும் தான் விவசாயியின் பொருளாதார வளத்தை தீர்மானிக்கும் அடிப்படை காரணிகள். இதை நன்கு புரிந்து கொண்டு லாபகரமாக விவசாயம் செய்து வருகிறார் காஞ்சிபுரம் விவசாயி ரவிக்குமார். சாம்சன் அவர்களுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வரும் ரவிக்குமார் மூன்று போகம் சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.
“ஒரு ஏக்கர்ல தூய சம்பா, சீரக சம்பா மாதிரியான பாரம்பரிய நெல் ரகங்கள பயிரிட்டு இருக்கேன். நெல் வயலோட வரப்புல தேக்கும், மகோகனியும் சேர்த்து 120 மரங்களல நட்டுருக்கேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் தான் பண்றேன். ரசாயனம் பயன்படுத்துறது இல்ல.

நாட்டு மாட்டோட சாணம், கோமியத்துல இருந்து ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், பஞ்ச கவ்யம் தயாரிச்சு இயற்கை உரமா பயன்படுத்துறேன். அதோடு மரங்கள்ல இருந்து விழுகிற இலை, தளைகளும் மண்ணுக்கு உரமாகுது. இதனால, என்னோட நிலத்துல மண் புழுக்களோட எண்ணிக்கை அதிகமாகி மண் வளமா இருக்கு. பயிரும் சிறப்பா வளருது. வருசத்துக்கு 2 போகம் நெல்லும், ஒரு போகம் உளுந்து, வேர்கடலையும் போட்டு வருசம் முழுக்க வருமானம் வர்ற மாதிரி பாத்துக்கிறேன். இதேபோல், மீதமுள்ள நிலத்தில் 10-க்கு 10 அடி இடைவெளி விட்டு 350 டிம்பர் மரங்களல நட்டு அதுக்கு இடையில் வேர்க்கடலைய 2 போகம் ஊடுப்பயிரா பண்றேன். வெண் கடம்பு, செம்மரம், மகோகனி ஆகிய மரங்களை கலந்து வளர்த்து வருகிறேன்” என்றார். வேர்கடலையை நேரடியாக விற்காமல், அதை கடலை எண்ணெயாக மாற்றி மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறார்.

கடலை புண்ணாக்கை மாட்டு தீவனமாகவும், இயற்கை இடுப்பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தி கொள்கிறார். அதேபோல், நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்கிறார். “ஒரு ஏக்கர்ல ஒரு போகத்துக்கு 17 மூட்டை வரை நெல் அறுவடை எடுக்குறேன். ஒரு மூட்டை 80 கிலோ இருக்கும். அதை அரிசியா மாத்தி ரகத்துக்கு ஏற்ப கிலோ ரூ.65 – ரூ.80 வரை நேரடியா விற்பனை பண்றேன். இதே மாதிரி மரத்துக்கு நடுவுல ஊடுபயிரா போட்டுருக்குற வேர்கடலையில இருந்து 67 கிலோ எண்ணெய்யும், 50 கிலோ புண்ணாக்கும் கிடைச்சது. ஒரு கிலோ கடலை எண்ணெய் ரூ. 280 ல இருந்து ரூ.350 வரை விக்கிறேன்” என்றார். இவர் முப்போகமும் பயிர் செய்வதால் 3 மாதத்திற்கு ஒரு முறை தொடர் வருமானம் வந்து கொண்டே இருக்கிறது.

15 வருடங்கள் கழித்து அவர் நட்டுல டிம்பர் மரங்களில் இருந்து ஒரு பெரும் தொகை வருமானமாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதற்கு இடையில் வரப்போரம் இருக்கும் பனை மரங்களில் ஈஷா நர்சரியில் இருந்து வாங்கி வந்த மிளகு கொடியையும் ஏற்றியுள்ளார். மற்ற டிம்பர் மரங்கள் வளர்ந்த பிறகு அதிலும் மிளகு ஏற்றும் திட்டம் வைத்துள்ளார். மேலும், அருகிலேயே நாட்டு கோழிப் பண்ணைக்கான திட்டமும் வைத்துள்ளார். இவரை போன்று பல சாதனைகளை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ள காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘பலா திருவிழா’ என்ற நிகழ்ச்சி வரும் மே 28-ம் தேதி பண்ருட்டியில் நடைபெற உள்ளது. ஒரே இடத்தில் 100 வகை பலா மரங்கள் வளரும் தோட்டத்தில் நடக்கும் இவ்விழாவில் கலந்து கொள்ள 9442590079 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

nine + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi