திருப்புத்தூர், ஏப்.27: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் உள்ள மாணிக்க நாச்சி அம்மன் மற்றும் ஆதினமிளகி அய்யனார், முத்து முனியய்யா கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்த திருப்புத்தூர் அருகே மடக்கரைபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி(58) என்பவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் மாடு முட்டியதில் 70 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த மஞ்சுவிரட்டை அரசு அனுமதியின்றி நடத்தியதாக கூறி வெளியாத்தூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த பெரியதம்பி, சுரேஷ் கருப்பையா, கல்யாண சுந்தரம், சண்முகராஜா, பாரதி, பெரியகருப்பன் ஆகிய 6 பேர் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எஸ்.ஐ சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.